கைகள் வெட்டப்பட்டு பொலிஸ் தடுப்பு வேலியில் பிணைக்கப்பட்ட ஆணின் சடலம்: டெல்லியில் பயங்கரம்
இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில் டெல்லி சிங்கு எல்லை பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு கால் மற்றும் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸ் தடுப்பு வேலியில் பிணைக்கப்பட்டு, உடல் முழுக்க சேதப்படுத்தப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் நிஹாங்ஸ் சீக்கியர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், கொலை செய்யப்பட்டவரின் பெயர் லக்வீர் சிங் எனவும், இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, சீக்கியர்கள் வணங்கும் குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட பலரின் கவிதைகள், இலக்கியங்கள் இடம்பெற்ற புனித நூலை இழிவுபடுத்தும் வகையில் லக்வீர் சிங் செயல்பட்டதாகவும்,
அதனால் நிஹாங்ஸ் சீக்கியர்களால் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் குற்றவாளி தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.