நாங்கள் இலங்கைத்தமிழர்கள் முதலான புலம்பெயர்வோரை திருப்பி அனுப்பினோம்... பிரித்தானியாவும் அதையே செய்யலாம்: சொல்வது யார் தெரியுமா?
தங்கள் நாடுகளில் உயிருக்கு ஆபத்து என்று தெரியவரும்போது, தங்களால் தங்கள் தாய் நாட்டிலேயே வாழ முடியாது என்ற சூழல் ஏற்படும்போது, மக்கள் தாங்கள் பிறந்த தங்கள் தாய்நாட்டையே விட்டு விட்டு மற்றொரு நாட்டில் சென்று வாழத் துணிகிறார்கள்.
ஒரு காலத்தில் பல நாடுகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன...
ஆனால், இப்போது அப்படி மற்றொரு நாட்டுக்குள் சென்று வாழ்க்கையைத் துவங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!
சில நாடுகளில், புகலிடம் கோரி வருவோரைப் பிடித்து நேரடியாக சிறையில் சென்று அடைக்கும் நடைமுறை கூட தற்போது இருக்கிறது, அதுவும் ஆளரவமற்ற தீவுகளில் இருக்கும் சிறைகளில் கூட மக்கள் அடைக்கப்படுகிறார்கள்.
ஒரு கட்டத்தில், அகதிகள் எங்கள் பொருளாதாரம் மேம்பட உதவியாக இருக்கிறார்கள் என சில நாடுகள் பாராட்டக்கூட செய்தன. ஆனால், இப்போது, எங்கள் நாடு எங்களுக்கே, இங்கே உங்களுக்கென்ன வேலை என்று கேட்கும் மனப்பான்மை பல நாட்டவர்களுக்கு உருவாகிவிட்டது.
அப்படி கேட்கும் நாடுகளில், படகுகளில் புகலிடம் கோரி வருவோரை சிறையில் அடைக்கும் நாடாக அவுஸ்திரேலியா பெரிய அளவில் பேசப்படுகிறது.
இப்போது பிரித்தானியாவில், அதன் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் புலம்பெயர்வோரை, குறிப்பாக பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்பவர்களை தடுக்க பல நூறு மில்லியன் பவுண்டுகள் செலவிடவும் தயாராக இருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான Alexander Downer குரல் கொடுத்திருக்கிறார்.
நாங்கள் இலங்கையர்கள் முதலானவர்களை திருப்பி அனுப்பினோம், நீங்களும் அனுப்ப முடியும் என்பதே அவர் பிரித்தானியாவுக்கு அளித்திருக்கும் ஆலோசனை.
உங்களுக்கு முருகப்பன் குடும்பத்தை நினைவிருக்கலாம்...
தந்தை Nades, தாய் பிரியா, மகள்கள் கோபி மற்றும் தார்ணிக்கா...
இலங்கையில் போருக்குத் தப்பி அவுஸ்திரேலியாவுக்கு ஓடி, அங்கே வாழ்ந்துவந்த நிலையில், அந்த குடும்பத்தைக் கைது செய்து நடுக்கடலில் கிறிஸ்துமஸ் தீவு என்னும் தீவிலுள்ள சிறையில் அடைத்தது அவுஸ்திரேலியா அரசு.
தனிமையில் அந்த குடும்பம் அனுபவித்த சோகம் சொல்லி மாளாது. அவர்களைப்போலவே புகலிடம் கோரி வந்தவர்களை அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.
இப்போது, அதைத்தான் நினைவு கூறுகிறார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான Alexander Downer.
ஒரு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக எனக்கு இந்த விடயத்தில் போதுமான அனுபவம் இருக்கிறது என்று கூறும் Downer, புலம்பெயர்வோர் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால், மக்கள் - கடத்தல், என்ற அந்த விடயத்தையே அடித்து துவம்சம் செய்யவேண்டும் என்கிறார் அவர்.
இந்த புலம்பெயர்வோர்தான் இந்த கடத்தல்காரர்களுக்கு வருவாயை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே, அந்த கடத்தல் விடயத்தை ஒழிக்கவேண்டுமானால் அதற்கான ஒரே வழி இந்த புலம்பெயர்வோரை பிரித்தானிய கடற்கரை அடைய விடாமல் செய்வதுதான் என்கிறார் Downer.
அவர்களால் பிரித்தானியாவை அடைய முடியாது என்று தெரிந்தால், அவர்கள் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள். பணம் வாங்காவிட்டால் கடத்தல்காரர்கள் கடத்த முன்வர மாட்டார்கள் என்கிறார் அவர்.
நாங்கள் அதைத்தான் செய்தோம், படகுகளை திருப்பி அனுப்பினோம். இனி அவுஸ்திரேலியாவுக்கு வரமுடியாது என்பது தெரியவந்ததால் மக்கள் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை. புலம்பெயர்வோர் எண்ணிக்கை கட்டுப்பட்டது என்கிறார் அவர்.
ஆகவே, பிரீத்தி பட்டேலும் கொஞ்சமும் யோசிக்காமல் புலம்பெயர்வோர் வரும் படகுகளை திருப்பி அனுப்பலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார் Downer.
பிரித்தானியா, தன் நாட்டு பிரச்சினையை, தான் பார்த்துக்கொள்கிறது. இந்த மனிதன் ஏன் தன் வேலையை விட்டு விட்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர் வயிற்றில் அடித்து அவர்கள் வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொள்கிறாரோ தெரியவில்லை!