பிரித்தானியாவின் புதிய பயணப் பட்டியல்: திட்டத்திலிருந்து பின்வாங்கிய பிரதமர் போரிஸ்!
பிரித்தானியாவின் தற்போதைய பயணப் பட்டியலில் புதிதாக பிரிவுகள் சேர்க்கப்படும் திட்டத்திலிருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பின்வாங்கினார்.
பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணங்களுக்காக ஒரு புதிய "அம்பர் கண்காணிப்புப் பட்டியலை" நிறுவும் யோசனையை பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்துவிட்டார்.
பிரித்தானியாவின் பயண அமைப்பை முடிந்தவரை எளியதாக உருவாக்க விரும்புவதாக அவர் திங்கட்கிழமை மாலை தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரித்தானியா அதன் பயணப் பட்டியலை மேலும் கடுமையாக்கியுள்ளது. அதாவது, ஏற்கனவே பச்சை, அம்பர் மற்றும் சிகப்பு ஆகிய பட்டியல் இருந்த நிலையில், புதிதாக பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் பிரிவுகளை அதன் பயணப் பட்டியலை சேர்த்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அம்பர் கண்காணிப்பு எனும் மற்றோரு புதிய பட்டியலை இந்த வார இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்தனை வகையான பட்டியல்களால் பெரும் குழப்பம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் உட்பட அமைச்சர்கள் தரப்பிலிருந்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால், மொத்த ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா துறையும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரித்தானிய பயணிகளின் மிகவும் விரும்பத்தக்க சுற்றுலா தலங்களாக இருக்கும் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில், சிகப்பு பட்டியலுக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதால், இது பல பிரித்தானியர்கள் கோடை விடுமுறை கனவை சிதைக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் அறிவித்ததன்படி அரசாங்கத்தின் இந்த டிராவல் ட்ராஃபிக் லைட் சிஸ்டத்தில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது.