பிரித்தானியாவின் புதிய பிரதமர் இந்த ஐவரில் ஒருவரா? வெளியான பட்டியல்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டு பதவி விலக நேர்ந்தால், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பில் ஐவரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கொரோனா ஊரடங்கின் போது முன்னெடுக்கப்பட்ட விருந்து உட்பட தொடர்ச்சியான ஊழல்களைத் தொடர்ந்து திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.
ஆனால் இறுதி வரையில் இந்த விவகாரத்தில் போராட இருப்பதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியுற்றால், புதிய பிரதமரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
தற்போது போரிஸ் ஜோன்சனுக்கு பதிலாக பிரித்தானிய பிரதமராக ஐவரில் ஒருவர் வர வாய்ப்புள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் தற்போதை வெளிவிவகார செயலர் Liz Truss உள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர் என்பதுடன், அவர்கள் முன்னெடுக்கும் கருத்துக்கணிப்புகளில் எப்போதும் முதலிடம் பிடிப்பவர்.
இரண்டாவது இடத்தில் முன்னாள் வெளிவிவகார செயலர் ஜெர்மி ஹன்ட் இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமராகும் தனது லட்சியம் முற்றிலும் மறைந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாவதாக தற்போதைய நிதியமைச்சர் ரிஷி சுனாக் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. பிரதமர் ஜோன்சனின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் ரிஷி சுனாக் பிரதமர் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் தமது மனைவியின் வரி விவகாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்ததுடன், கொரோனா ஊரடங்கின் போது ரகசிய விருந்து கொண்டாட்டங்களில் பிரதமர் ஜோன்சனுடன் ரிஷியும் பங்கேற்றிருந்தார்.
அடுத்ததாக, தற்போதைய கல்வித்துறை செயலாளரான Nadhim Zahawi பெயர் இடம்பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசியை பிரித்தானியா முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் இந்த Nadhim Zahawi.
மட்டுமின்றி, குழந்தையாக இருக்கும் போதே, ஈராக்கில் இருந்து அகதியாக பிரித்தானியா வந்தவர் இவர். ஐந்தாவது இடத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான Penny Mordaunt பெயர் கூறப்படுகிறது.
கடந்த முறை தலைவர் போட்டியில் ஜெர்மி ஹன்ட்டை ஆதரித்ததாக கூறி போரிஸ் ஜான்சனால் பதவி பறிக்கப்பட்டவர் Penny Mordaunt.
தற்போதைய ஆட்சியில் இளைய வர்த்தக அமைச்சராக பொறுப்பில் உள்ளார். ஊரடங்கு விருந்து விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது, வெட்கக்கேடான செயல் என விமர்சித்தவர் இவர்.