பிரித்தானியா மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! இன்று மக்கள் முன் உரையாற்றவிருக்கும் போரிஸ் ஜான்சன்
ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி பிரித்தானியாவில் பொதுமுடக்கம் நெகிழ்த்தப்பட வாய்ப்பில்லை என்றும் அது மேலும் தள்ளிவைக்கப்படலாம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று மக்களுக்கு அறிவிக்க இருக்கிறார்.
பிரித்தானியாவில் ஜூன் மாதம் 21ஆம் திகதி பொதுமுடக்கத்தை விலக்கிக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பொதுமுடக்க விலக்கலை ஜூலை மாதம் 19ஆம் திகதி வரை தாமதிக்க போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். அது குறித்த அறிவிப்புகளை வெளியிட அவர் இன்று மக்கள் முன் உரையாற்ற இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும், விருந்தோம்பல் துறை மற்றும் சினிமா துறையின் எச்சரிக்கையையும் மீறி போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இப்போதைக்கு மொத்தமாக கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறும் ஜான்சன் மீண்டும் நாடு பழைய நிலைமைக்கு சென்று விடாமல் இருக்கவேண்டுமானால் பொதுமக்கள் இன்னும் கொஞ்சம் காலம் பொறுமை காக்கவேண்டும் என மக்களைக் கேட்டுக்கொள்ள இருக்கிறார்.
டெல்டா வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு அடங்காமல் போகலாம் என்ற அச்சம் நிலவுவதையடுத்து, பொதுமுடக்க நெகிழ்த்தலை நான்கு வாரங்கள் தள்ளி வைப்பதால் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்படலாம் என அமைச்சர்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.