பிரித்தானிய பிரதமர் இந்த திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! போரிஸ் ஜோன்சனுக்கு வலுக்கும் எதிர்ப்பு
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடாது என எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
முன்னதாக குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால் பிரித்தானியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜோன்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.
இதனால் வரும் ஏப்ரல் 26-ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார்.
டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் இரட்டை மரபணு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவிலும் பரவிவருகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் 77 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்தியாவை பயணத் தடை விதிக்கும் 'சிவப்பு பட்டியலில்' சேர்ப்பது குறித்து பிரித்தானிய சுகாதாரத் துறை ஆலோசனை செய்துவருகிறது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போரிஸ் ஜோன்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என பிரித்தானியாவின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் கட்சியின் செயலாளர் Steve Reed கூறுகையில் "அவர் இந்தியாவுக்கு பயணிப்பதை விட ஜூம் கால் மூலமாக அவர் தனது வேலைகளை செய்து கொள்ளலாம்" என கூறியுள்ளார்.