பிரித்தானியர்கள் இனி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டாம்... எப்போது முதல் தெரியுமா? பிரதமர் ஜோன்சன் சூசகம்
பிரித்தானியாவில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கும் நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல், கொரோனா கட்டுப்பாடுகளில் முக்கிய தளர்வுகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
அதன் ஒருபடியாக ஜூன் மாதம் முதல் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற தேவை இருக்காது என அரசு தரப்பில் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக மே 17 முதல் 6 பேர்கள் கொண்ட குழு ஒன்றாக கூடலாம் எனவும், இரு உறவினர்கள் ஒன்றாக இரவில் தங்கவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
நீண்ட ஓராண்டுக்கு பின்னர் இதுபோன்ற கட்டுப்பாடுகளை பிரித்தானியா அரசு நீக்க உள்ளது. மட்டுமின்றி, நண்பர்கள் உறவினர்கள் ஆரத்தழுவிக்கொள்ள அனுமதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி பொதுமக்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளது.
இதனிடையே, நாம் திட்டமிட்டபடியே அனைத்தும் முன்னோக்கி செல்வதாக குறிப்பிட்ட பிரதமர் ஜோன்சன், இதுவரை 50 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய மக்களில் நான்கில் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனாலையே, கட்டுப்பாடுகளை நீக்கும் பொது கருத்துக்கு அரசாங்கம் எட்டியுள்ளதாக போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜூன் 21 வரை சமூக இடைவெளியை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், அதன் பின்னர் அதற்கான தேவை இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மே மாதம் 17 முதல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லவும் அனுமதிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜோன்சன் தெரிவித்துள்ளார்.