ஒரே போட்டியில் நான்கு வீரர்களை மன்கட் முறையில் வெளியேற்றிய பந்துவீச்சாளர்
ஒரே ஆட்டத்தில் நான்கு பேரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார் கேம்ரூன் வீராங்கனை மேவ் டெளமா.
போட்ஸ்வானாவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணம் போட்டிக்கான ஆப்பிரிக்கா தகுதிச்சுற்றுப் போட்டியில் உகாண்டா - கேம்ரூன் மகளிர் அணிகள் விளையாடின.
முதலில் துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் உகாண்டா வீராங்கனைகள் நான்கு பேரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து வியக்க வைத்துள்ளார் 16 வயது கேம்ரூன் பந்துவீச்சாளர் மேவ் டெளமா.
முதல்முறை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தபோதே அது வியப்பாக பார்க்கப்பட்டது. இருப்பினும் அடுத்தடுத்து துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட உகாண்டா வீராங்கனைகளும் கவனக்குறைவில் டெளமா பந்துவீச வரும்போது கிரீஸை விட்டு வெளியே வந்ததால் அடுத்தடுத்து மூன்று பேரை அதே முறையில் ரன் அவுட் செய்தார் டெளமா.
— hypocaust (@_hypocaust) September 12, 2021
இருப்பினும் அவருடைய இந்த முயற்சியால் கேம்ரூன் அணிக்கு சொல்லும்படியான நன்மை கிடைக்கவில்லை. 2-வதாக துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கேம்ரூன் அணி 14.3 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை எதிர்கொண்டது.
கிரிக்கெட் விதிமுறைகளின்படி மன்கட் செய்ய பந்துவீச்சாளருக்கு உரிமை உண்டு என்றாலும் கிரிக்கெட் உலகில் இதற்கான ஆதரவு குறைவாகவே உள்ளது.
2019 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் துடுப்பாட்டவீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.