ராக்கி பாய் ஆக மாற நினைந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் படம் பார்த்த ஈர்ப்பில் அதிகளவில் சிகரெட் புகைத்த சிறுவன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ராஜேந்திர நகரை சேர்ந்த 15 வயது சிறுவன், மூச்சு திணறல் ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஓரளவு குணமடைந்த சிறுவனிடம், மருத்துவர்கள் என்ன ஆயிற்று என்று கேட்டபோது அவன் கூறிய பதில் அதிர்ச்சி அளித்தது. குறித்த சிறுவன் கடந்த வாரம் கேஜிஎப் படம் பார்த்துள்ளான். அந்த படத்தால் அதிகம் ஈர்க்கப்பட்ட அவன், படத்தின் நாயகன் ராக்கி பாய் போல் மாற வேண்டும் என நினைத்துள்ளான்.
எனவே அந்த கதாபாத்திரத்தை போல் சிகரெட் புகைக்க நினைத்த சிறுவன், ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்துள்ளான். முதல் முறையாக, அதுவும் ஒரு பாக்கெட் அளவில் புகைபிடித்ததால் சிறுவனுக்கு நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது சிறுவன் நலமாக இருப்பதாகவும், ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் தலைமுறையினர் திரைப்படங்களால் அதிக அளவில் ஈர்க்கப்படுகின்றனர். கதாநாயகர்களின் நடவடிக்கைகளை அவர்கள் இயல்பு வாழ்வில் கடைபிடிக்க முயல்வதால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.