தாயார் சொன்ன ஒற்றை வார்த்தை... உலக மக்களின் கவனம் ஈர்க்கும் சிறுவனின் புகைப்படம்
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் குடியிருக்கும் 6 வயது சிறுவன், தாயார் சொன்ன வார்த்தைக்காக தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
லாஸ் வேகஸ் பகுதியில் குடியிருந்துவருபவர் 6 வயதேயான Mason Peoples என்ற பள்ளி மாணவன். அவரது பள்ளியில் நடந்த புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்ட Mason Peoples, தமது முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை கழட்ட முன்வரவில்லை என்றே கூறப்படுகிறது.
குடியிருப்பில் இருந்து கிளம்பும் போதே தாயார் கூறியிருந்ததால் அவர் புகைப்படம் எடுக்கும் போதும் மாஸ்க் அணிந்திருந்துள்ளார். புகைப்பட கலைஞர் பல முறை மாஸ்க் தொடர்பில் உறுதி செய்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும், தாயார் சொல்வதை தாம் மறுப்பதற்கு இல்லை எனவும் அதனால் மாஸ்க் கழட்டுவதாக இல்லை எனவும் கூறியுள்ளார்.
தமது மகனிடம் மாஸ்க் அணிவதின் பயன் குறித்து விவாதித்ததாகவும், மாஸ்க் அணிவது நம்மை மட்டுமல்ல நமக்கு சுற்றும் இருப்பவர்களையும் பாதுகாக்கும் என கூறியதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றால் சொந்த தாத்தாவை இழந்த சிறுவன் Mason Peoples. அதன் பின்னரே மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தாயார் நிக்கோல் அடிக்கடி மகனுக்கு சொல்லி வந்துள்ளார்.
மட்டுமின்றி தாத்தாவின் இழப்பு சிறுவன் Mason Peoples-ஐ வெகுவாக பாதித்ததாகவும் நிக்கோல் குறிப்பிட்டுள்ளார். தமது மகனின் மாஸ்க் கதையை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த நிக்கோல் சிறுவனின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மட்டுமின்றி, மாஸ்க் வாங்குவதற்காக 7 டொலர் தொகையை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற வேண்டி குறிப்பிட்ட இணைய பக்கத்தில் பதிவும் செய்துள்ளார்.
ஆனால் சிறுவனின் மாஸ்க் கதை உலக மக்கள் பலரை ஈர்த்துள்ளதுடன், இதுவரை 25,693 டொலர் தொகை நன்கொடையாக குவிந்துள்ளது என நிக்கோல் தெரிவித்துள்ளார்.