பிரித்தானியாவில் மாயமான ஏழு வயது சிறுவன்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் வேடிக்கையான திருப்பம்
பிரித்தானியாவில் ஏழு வயது சிறுவன் ஒருவன் மாயமான விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் அவனை எதிர்பார்க்க முடியாத ஒரு இடத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஸ்காட்லாந்திலுள்ள East Ayrshire என்ற இடத்தில் தன் தாயுடன் வாழும் Carson Shephard என்ற ஏழு வயது சிறுவன், திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாயமானான். பொலிசார் பரபரப்பாக அவனைத் தேடி வந்தார்கள்.
இந்நிலையில், தற்போது அவன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக அவனது தாயாகிய Gemma Glover (27) தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை தங்கள் தோட்டங்கள், வீட்டின் பின் பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ள ஷெட் முதலான இடங்களில் தேடுமாறு கேட்டுக்கொண்ட பொலிசார், ஹெலிகொப்டர், மோப்ப நாய்கள், தீயணைப்பு வீரர்கள், எக்கசக்கமான வாகனங்கள் உதவியுடன் தாங்களும் Carsonஐ பரபரப்பாக தேடிவந்தார்கள்.
அவனது பாட்டி வீட்டில் அவனை பொலிசார் மூன்று தடவை தேடியும் கண்டுபிடிக்காத நிலையில், கடைசியாக, மனித உடலில் வெப்பத்தை வைத்து மனிதர்களை கண்டுபிடிக்க உதவும் thermal imaging cameras என்ற கமெராக்களின் உதவியுடன் அவனைத் தேடியிருக்கிறார்கள்.
பார்த்தால், அவன் தன் பாட்டியின் வீட்டுப் பரணில்தான் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறான். பரணில் விரிக்கப்பட்டிருந்த துணியோடு துணியாக சுருண்டு கிடந்த Carsonஐ பொலிசாரால் கண்டுபிடிக்க இயலாமல் போயிருக்கிறது. பின்னர், thermal imaging கமெராக்களின் உதவியுடன் தேடும்போதுதான், அவன் அங்கே ஒளிந்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எனவே, தன் மகன் தன் தாயின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான் என்ற செய்தியை Gemma வெளியிட, பொலிசார் உட்பட Carsonஐத் தேடிவந்த அனைவரும், அப்பகுதி மக்களும், இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.