இளவரசி கேட் தொடர்பில் தனியுரிமை மீறல்: மூன்று பேர் பணியிடை நீக்கம்
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தொடர்பில் தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக, மருத்துவமனை ஊழியர்கள் சிலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், ஜனவரி மாதம், உடல் நலம் பாதிக்கப்பட்டு, லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இளவரசிக்கு புற்றுநோய் தொடர்பான பிரச்சினை அல்ல என்று மட்டுமே பக்கிங்காம் அரண்மனை தெரிவித்திருந்ததேயன்றி, அவருக்கு என்ன பிரச்சினை என்றோ, அவருக்கு என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றோ தெரிவிக்கப்படவில்லை.
தனியுரிமை மீறல்
இந்நிலையில், இளவரசி கேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்களில் சிலர், இளவரசியின் மருத்துவ ஆவணங்களை (medical records) சோதித்து, அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தது தெரியவந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உடனடியாக, மருத்துவமனையை நிர்வகிக்கும் மூத்த அலுவலர் ஒருவர், அந்த விடயம் குறித்து பக்கிங்காம் அரண்மனைக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாகவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று பேர் பணியிடை நீக்கம்
இந்நிலையில், இளவரசியின் மருத்துவ ஆவணங்களை சோதித்து, அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், அவர்கள் மீது பிரித்தானியாவின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பால் தனியுரிமை மீறல் தொடர்பில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என்றும், அவர்கள் சட்டவிரோதமாக இளவரசியின் ஆவணங்களை அணுகியது தெரியவந்தால், மிகப்பெரிய அளவிலான ஒரு தொகை அபராதமாக செலுத்தும் நிலை அவர்களுக்கு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |