பிரித்தானியர்களுக்கு ஆகஸ்ட்டில் காத்திருக்கும் பேரதிர்ச்சி! நிலைமையை விளக்கும் சுகாதார செயலாளர்
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 100,000 கோவிட் பாதிப்புகள் வரை பிரித்தானியா காணக்கூடும் என்று புதிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் இன்று தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று இரவு பேசுகையில், ஜூலை மாதம் 19-ஆம் திகதி நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் என அறிவித்தார். மேலும் தற்போது உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில், இன்று காலை பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் “ஜூலை 19-ஆம் திகதி வரும்போது, பாதிப்பு எண்ணிக்கை இப்போது இருப்பதை விட இரு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், எனவே ஒரு நாளைக்கு 50,000 பேர் புதிதாக பாதிக்கப்படலாம் " என கூறினார்.
மேலும் "இந்த கோடையில் (ஆகஸ்ட்) அவை கணிசமாக உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்போது ஒரு நாளைக்கு 100,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படலாம்" என்றார்.
இருப்பினும், "பாதிப்பு எண்ணிக்கை, இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு "கடுமையாக பலவீனமடைந்து வருகிறது" என்று கூறினார்.