குங்குமம் வைக்கும் போது நடுங்கிய கை - மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
குங்குமம் வைக்கும் போது மணமகனின் கை நடுங்கியதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம். அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
கை நடுக்கத்தால் நின்ற திருமணம்
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நேற்று பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் ஒன்று நடைபெற இருந்தது.
மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், படை சூழ பெண் வீட்டாரின் வீட்டிற்கு ஊர்வலமாக வருகை தந்துள்ளார்.
இசை கச்சேரி உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர், பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கு நடைபெற்றது.
இந்த சடங்கின் போது, மணமகன் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது, அவரின் கை நடுங்கியுள்ளது.
இதனை பார்த்த மணப்பெண், மணமகனுக்கு உடலில் ஏதோ குறை உள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனை கண்ட, இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் வீட்டார், பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், திருமணம் வேண்டாம் என்பதில் மணப்பெண் உறுதியாக இருந்ததால், திருமணம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த சமரசமும் ஏற்படவில்லை.
திருமணம் நின்றதால், திருமணத்திற்காக வழங்கிய வரதட்சிணை பணத்தை திரும்ப தர வேண்டுமென பெண் வீட்டார் கோரிக்கை வைத்தனர்.
"ரூ.90,000 ரொக்கமாக பெற்றோம். நகை, புடவை, டிஜே இசை, போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனைத்து பணத்தையும் செலவழித்து விட்டோம். சத்தம் அல்லது அழுத்தம் காரணமாக கை நடுக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
மணமகனுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக பெண் கூறியதால், பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்" என மணமகனின் தந்தை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |