'சார் காஸ்ட்லி மேக்கப் கலைந்துவிடும்' முகக்கவசம் அணிய மறுத்த மணப்பெண்ணுக்கு அபராதம்!
பஞ்சாபில் மேக்கப் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிய மறுத்த மணப்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்திய மாநிலம் பஞ்சாபில், சண்டிகரில் கன்னா என்ற இடத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணம் நடப்பதற்கு முன்பாக மணப்பெண்ணை பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மேக்-அப் போட்டுக்கொண்ட மணப்பெண்ணை உறவினர்கள் காரில் மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
சண்டிகரில் கொரோனாவுக்காக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொலிஸார் மணப்பெண் வந்த காரை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த அவரது சகோதரர், 2 குழந்தைகள் என அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். மணப்பெண் மட்டும் முகக்கவசம் அணியவில்லை.
அதனை கவனித்த பொலிஸார், ஏன் முககவசம் அணியவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மணப்பெண், முகக் கவசம் அணிந்தால் மிகவும் அதிகமாக செலவுசெய்து போட்ட மேக்-அப் கலைந்துவிடும், அதனால் அணியமுடியாது என்று கூறியுள்ளார். அவர் கூறியதை குடும்பத்தினரும் ஆதரித்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா கட்டுப்பட்டு விதிகளை மீறியதற்காக மணப்பெண்ணுக்கு பொலிஸார் ரூ.1000 அபராதம் விதித்தனர். அதன் பிறகு அவர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.