பிரித்தானிய பெண்மணி ஆயுததாரிகளால் வெளிநாட்டில் கடத்தல்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
மேயர் ஒருவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பிரித்தானிய-மெக்சிகன் பெண் அரசியல் ஆர்வலர் ஒருவர் மாயமான நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிளாடியா குரூஸ் என்ற 48 வயதான அரசியல் ஆர்வலரே தற்போது மாயமாகியுள்ளார். மார்ச் 26 அன்று மெக்ஸிகோவில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் போது சிவப்பு டிரக்கில் வந்த ஆயுததாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரித்தானிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தத்தை அடுத்தே, சட்டத்தரணியான கிளாடியா தொடர்பில் உள்ளூர் நிர்வாகம் விசாரணையை துவங்கியுள்ளது.
தென்மேற்கு மெக்ஸிகோவின் ஓக்ஸாக்காவில் உள்ள Asuncion Nochixtlan நகராட்சியின் மேயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவரே தற்போது மாயமாகியுள்ளார்.
ஊழல்வாதியான அந்த மேயருக்கு எதிராக கிளாடியா தொடர்ந்து போராடி வந்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதத்தில் தேர்தலில் போட்டியிடும் இவர், தற்போது பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக மெக்சிகோவின் ஊழல் தடுப்பு அலுவலகத்தால் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ள சட்டத்தரணி கிளாடியாவுக்கு ஆதரவாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், அரசியல் ஆர்வலரான கிளாடியாவுக்கு எதிராக தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது என அவரது சகோதரிகள் இருவர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
கிளாடியா மாயமான விவகாரத்தை உள்ளூர் நிர்வாகம் விசாரிக்க மறுத்து வந்த நிலையில், பெடரல் மெக்சிகன் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், இங்கிலாந்தில் ஷெஃபீல்டில் வசிக்கும் கிளாடியாவின் சகோதரிகள், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், கிளாடியாவைக் கண்டுபிடிப்பதில் மெக்சிகன் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இதனையடுத்தே, தற்போது கிளாடியா தொடர்பில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.