வாலிப வயது மகனை இழந்த தாய்... எடுத்துள்ள துயர முடிவு
2பிரித்தானியப் பெண்ணொருவர் 23 வயது மகனை சாகக்கொடுத்த நிலையில், சுவிட்சர்லாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள இருக்கிறார்.
23 வயது மகனை இழந்த தாய்...
இங்கிலாந்தைச் சேர்ந்தவரான வெண்டி ( Wendy Duffy, 56) என்னும் பெண்ணின் மகன் மார்க்கஸ் (23). நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பார்ட்டி ஒன்றிற்குச் சென்று திரும்பிய மார்க்கஸ், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே உடல் நிறம் நீலமாக மாறி சுயநினைவற்றுக் கிடப்பதைக் கண்டார் வெண்டி.

அதிர்ச்சியடைந்த வெண்டி, முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணி செய்பவர் என்பதால் உடனடியாக மகனுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மார்க்கஸின் சுவாசக்குழாயில் செர்ரி தக்காளி ஒன்று அடைத்துக்கொண்டிருப்பதைக் கண்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றினாலும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்.
ஐந்து நாட்களுக்குப் பின் அவரது செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட, மார்க்கஸின் இதயத்தை தானம் பெற்றதால், தன்னால் தன் பிள்ளைகளுடன் விளையாட முடிவதாகக் கூறி வெண்டிக்கு நன்றி கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் இதய தானம் பெற்றவர்.
என்றாலும், வெண்டியால் தன் மகனுடைய இழப்பைத் தாங்கமுடியவில்லை.
மகன் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துபார்க்கக்கூட இயலாத வெண்டி, சுவிட்சர்லாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார்.
இன்னும் ஒரே நாள்...
சுவிட்சர்லாந்தில் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான நடைமுறைகள் சுமார் ஒரு ஆண்டு காலம் நீடித்த நிலையில், நாளை மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள இருக்கிறார் வெண்டி.

தன் உறவினர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி தன் முடிவு குறித்து பகிர்ந்துகொண்டு, நாளை அவர் என்ன உடை உடுத்த இருக்கிறார், உயிரிழக்கும்போது என்ன இசை ஒலிக்கவேண்டும் என்பது முதலான விடயங்களை முன்கூட்டியே முடிவு செய்துள்ள வெண்டி, கடைசியாக தான் உயிரிழக்கும்போது தன் மகனுடைய சட்டையை அணிந்துகொள்ள இருக்கிறார்.
என் மகனுடைய வாசனை இன்னும் அந்த சட்டையில் இருக்கிறது என்று கூறியுள்ள வெண்டி, தன் உயிர் பிரியும்போது, தன் ஆவி எளிதாக வெளியேறுவதற்காக, அறையின் ஜன்னல்களை திறந்துவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தன் உடைமைகளை எல்லாம் விலங்குகள் நல தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு எழுதிவைத்துள்ளார் வெண்டி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |