நாட்டை காக்க பிரித்தானிய இராணுவத்தால் முடியாது: எச்சரிக்கும் முன்னாள் தளபதி
தற்போதைய நிலையில் பிரித்தானிய இராணுவம் மிகவும் பலவீனமாக உள்ளது எனவும், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நாட்டை காக்க அதனால் முடியாது என முன்னாள் முதன்மை தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியானது மிகவும் குறைவு எனவும், அதும் முதன்மை காரணங்களில் ஒன்று என முன்னாள் தளபதி Lord West எச்சரித்துள்ளார்.
2002 முதல் 2006 வரையில் கடற்படை முதன்மை தளபதியாக சேவையாற்றியவர் Lord West. இவரே தற்போது பிரித்தானிய இராணுவம் தொடர்பில் வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
நோக்கங்கள் உச்சத்தில் இருந்தபோதிலும், பல ஆண்டுகளாக இராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதில் பற்றாக்குறை உள்ளது என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அச்சுறுத்தல் ஏதுமற்ற பாதுகாப்பான சமூகத்தை கொண்ட நமது அரசாங்கங்களுக்கு பாதுகாப்புக்காக பணத்தைச் செலவிடுவது மிகவும் கடினமாக உள்ளது என்றார்.
இராணுவத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி, தயார் படுத்தியதாலையே, தற்போது நாம் பாதுகாப்பான சமூகமாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்றார் Lord West.
போர் முனையில் வெற்றிகள் முடிவு செய்யப்படுவதில்லை, ஆனால் போருக்கு முன்பாக இராணுவத்தை பலப்படுத்துவது தான் வெற்றியின் முதல் நிலை என தெரிவித்துள்ளார் Lord West.
உண்மையில் ஒரு போரை எதிர்கொள்ள நமது இராணுவம் தயாராக இல்லை எனவும், மிகவும் பலவீனமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, நமது முப்படைகளும் போதுமான எண்ணிக்கையிலும் இல்லை என Lord West சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணிக்கை தான் பேசும் என குறிப்பிட்டுள்ள அவர், அது போர் கப்பல், இராணுவ விமானங்கள் அல்லது வீரர்கள் என எதுவானபோதும், நாம் பின் தங்கியே உள்ளோம் என்றார்.
மட்டுமின்றி, ஐரோப்பாவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அது உலகப் போராக விரிவடை வாய்ப்பிருக்கையில், பாதுகாப்புச் செலவினங்களில் பிரித்தானியா நிர்வாகம் உடனடி நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1945ல் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரித்தானிய ஆயுதப் படைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. 1950 களின் முற்பகுதியில், கொரியப் போரின் காரணமாக வீரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200,000 அதிகரித்தது.
ஆனால் தற்போது பிரித்தானிய இராணுவத்தில் வெறும் 148,000 வீரர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 4,000 வீரர்கள் மட்டுமே புதிதாக இணைந்துள்ளனர்.