பிரித்தானியாவில் 40,000 செவிலியர்கள் பற்றாக்குறை... இருந்தும் மொத்தமாக வெளியேற திட்டமிட்டுள்ள வெளிநாட்டவர்கள்
பிரித்தானியாவில் சுமார் 40,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அப்படி இருந்தும், செவிலியர் பணி செய்யும் ஏராளமான வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
இக்கட்டான நிலையில் செவிலியர் பணி செய்யும் வெளிநாட்டவர்கள்
பிரித்தானியாவில் செவிலியர் வேலை என்றதும், மனதில் கனவுகளுடன் வரும் வெளிநாட்டவர்கள் பலர், பிரித்தானியாவில் நடைமுறையில் இருக்கும் சில விதிகளால், வறுமைக்குள் தள்ளப்படும் ஒரு அபாயம் நிலவுகிறது.
அதாவது, பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருவோர், ஐந்து ஆண்டுகளுக்கு அரசு உதவியை பெறுவதை சில விதிகள் தடுக்கின்றன.
ஆகவே, ஆசையுடன் பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த செவிலியர்கள் பலர், கடன் வாங்கும் நிலையும், உணவில்லாமல் வேலை செய்யும் நிலையும் காணப்படுவதாக Royal College of Nursing (RCN) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அவர்கள் தற்காலிக விசாவில் வேலைக்கு வருவதால் , அவர்களால் குழந்தைகளுக்கான அரசின் நிதி உதவி, வீட்டுக்கான உதவி முதலான எந்த அரசு உதவியையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பெறமுடியாது.
ஆகவே, வறுமையில் வாடும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதாவது, பிரித்தானியாவுக்கு வேலைக்கு வருகிறீர்களா? உங்களைக் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது, உங்களால் எங்கள் நாட்டுக்கு என்ன நன்மை என்பதுதான் எங்களுக்கு முக்கியம், என அரசு புலம்பெயர்ந்தோரைப் பார்த்து கூறுவதுபோல இருக்கிறது என்கிறார் பாதிக்கப்பட்ட ஒரு பெண்.
மொத்தமாக வெளியேறும் நிலையில் வெளிநாட்டவர்கள்
குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காக சொந்த நாட்டைவிட்டு பிரித்தானியாவுக்கு வேலைக்கு வந்த நிலையில், அங்கும் வறுமையில் வாழவேண்டும் என்ற நிலை உருவானால் என்ன செய்வது?
அப்படி வேலை பார்த்து என்ன பயன்?
ஆகவே, செவிலியர் பணி செய்யும் ஏராளமான வெளிநாட்டவர்கள், நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே பிரித்தானியாவில் சுமார் 40,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இருந்தும், செவிலியர் பணிக்கு வரும் வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவின் விதிகளால் வறுமைக்குள் தள்ளப்படும் நிலை காணப்படுவதால், பலர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த வெளிநாட்டு செவிலியர்கள், உள்நாட்டு செவிலியர்களைப்போலவே வரி செலுத்துகிறார்கள், சட்டப்படி காப்பீட்டுக்கு பணம் செலுத்துகிறார்கள். அப்படி இருந்தும், அவர்களுக்கு அரசின் உதவிகள் மறுக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் வறுமைக்குள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளதுடன், நோயாளிகள் நலனும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, இந்த செவிலியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அரசின் நிதி உதவி பெற முடியாது என்னும் விதியை நீக்கவேண்டும் Royal College of Nursing அரசைக் கோரியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |