இந்தியா, இலங்கை முதலான நாடுகளுடன் பிரித்தானியா செய்துள்ள ஒப்பந்தம்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய அரசு மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் பெருமளவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருவதைத் தொடர்ந்து, இந்தியா, பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பணி மற்றும் பயிற்சிக்காக பிரித்தானியாவுக்கு ஆட்களை அனுப்புவது தொடர்பாக அந்நாடுகளுடன் பிரித்தானியா இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
பிரித்தானியாவில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் பெருமளவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. பிரித்தானிய அரசு மருத்துவமனைகளில் 105,000 பணியிடங்களும், முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் 165,000 பணியிடங்களும் காலியாக உள்ளன.
அத்துடன், பிரித்தானிய மருத்துவர்கள், பிரித்தானிய அரசு மருத்துவமனைகளில் பணிக்கு சேருவது 2015இல் 69 சதவிகிதமாக இருந்தது, கடந்த ஆண்டில் 58 சதவிகிதமாக குறைந்துள்ளது.
Hospital generic
எனவே, காலியாக இருக்கும் பணியிடங்களை வெளிநாட்டவர்களைக் கொண்டு நிரப்பும் நிலை பிரித்தானியாவில் உருவாகியுள்ளது. பிரித்தானியாவில் அடுத்த பிரதமர் பதவியேற்றதும் அவர் இந்த விடயத்தை உடனடியாக செய்து நிறைவேற்றவேண்டும் என மருத்துவத்துறையினர் கோரிவருகிறார்கள்.
ஆக, கிட்டத்தட்ட அரசு மருத்துவமனைகள் முதல் பல்வேறு துறைகளிலுள்ளோர், புதிதாக பிரித்தானியாவுக்கு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் எனலாம்.
Peter Byrne/PA