புலம்பெயர்வோருக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் திட்டம்... கண்ணீர் விட்டுக் கதறிய புலம்பெயர்வோர் தம்பதி
பிரித்தானியாவுக்குள் நுழைய முற்படும் புலம்பெயர்வோரை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப பிரித்தானிய வெளியுறவுச்செயலர் பிரீத்தி பட்டேல் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும், அதையும் மீறி எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைவது என கங்கணம் கட்டிக்கொண்டு மீண்டும் படகுகளில் ஏறியிருக்கிறார்கள் புலம்பெயர்வோர்.
பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழையும் படகுகளை அப்படியே திருப்பி அனுப்பும் வகையில் சட்டங்களை திருத்தி அமைப்பது தொடர்பாக பிரித்தானிய வெளியுறவுச்செயலர் பிரீத்தி பட்டேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவுச்செயலரின் திட்டத்தையும் மீறி பிரித்தானியாவுக்குள் நுழைந்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு நூற்றுக்கணக்கான புலம்பெயர்வோர் பிரான்சின் கலாயிஸ் துறைமுகத்தில் கூடியுள்ளார்கள்.
இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற The Sun பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கண்ணீருடன் எதிர்கொண்டுள்ளார்கள் ஒரு புலம்பெயரும் தம்பதியர். ஈரானைச் சேர்ந்த அந்த தம்பதியர், பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்புவது தொடர்பாக பிரீத்தி பட்டேல் எடுக்க இருக்கும் முயற்சி தொடர்பாக வெளியான ஒரு செய்தியை தங்கள் மொபைலில் படித்திருக்கிறார்கள்.
Ahmed (29) என்னும் அந்த நபர், அருகில் கண்ணீர் வழிய நிற்கும் Yalda (26) என்ற தன் மனைவியுடன் அந்த செய்தியாளரை அணுகி, தங்கள் மொபைலில் இருக்கும் செய்தியைக் காட்டி, இது உண்மையா, அவர்கள் உண்மையாகவே எங்கள் படகுகளை திருப்பி அனுப்பப்போகிறார்களா? என்று கேட்டிருக்கிறார்.
நாங்கள் இன்று இரவே பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கப்போகிறோம், நாங்கள் இதற்காக ஆளுக்கு 2,000 யூரோக்கள் செலவிட்டுள்ளோம்.
அவர்கள் எங்களைக் காப்பாற்றாவிட்டால் என்ன செய்வோம்? வேறு வழியில்லை, அப்படியே அவர்கள் எங்களை விட்டுவிட்டால், கத்தியால் எங்கள் படகில் ஓட்டை போடப்போகிறேன். படகில் தண்ணீர் ஏறி நாங்கள் மூழ்குவதைப் பார்த்தாலாவது அவர்கள் எங்களை மீட்டு பிரித்தானியாவுக்கு கொண்டுசெல்லலாம் அல்லவா என்கிறார் Ahmed.
பிரான்சில் எங்களுக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. நாங்கள் வேலை செய்ய விரும்புகிறோம், வாழ விரும்புகிறோம், எப்படியாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்கிறார் Ahmedஇன் மனைவி Yalda.
எப்படியாவது பிரித்தானியாவுக்குள் சென்று பிழைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணீருடன் நிற்கும் அந்த தம்பதியர் கூறுவதைக் கேட்டால், எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியவில்லை!