பிரித்தானியாவில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் அடுத்த கட்ட விதிகள் அமுல்
புத்திசாலிகளும், திறமை மிகுந்தவர்களும் மட்டும் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தால் போதும் என்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலர்.
புலம்பெயர்தலை கடுமையாக கட்டுப்படுத்தும் பிரித்தானியா
சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் முன்னர் ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது நம்மில் பலரும் அறிந்ததே.
டிசம்பர் மாதத்தில், அது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் அறிவுப்புகள் வெளியிட்டிருந்தார்கள்.
புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்துவாதகக் கூறி பிரித்தானியா எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைய உள்ளது.
திறமையானவர்கள் மட்டுமே பிரித்தானியாவுக்கு வேண்டும்
இந்நிலையில், புத்திசாலிகளும் திறமை மிகுந்தவர்களும் மட்டும் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தால் போதும் என்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.
நமது பொருளாதாரத்துக்கு அவசியமான புத்திசாலிகள் மற்றும் திறமை மிக்கவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மொத்த புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைத்து, அவ்வகையில், நாம் நமது புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறும் ஜேம்ஸ், நான், பிரித்தானிய மக்களின் தேவைகளை சந்திக்கும் ஒரு புலம்பெயர்தல் அமைப்பை அளிப்பதாகவும், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன், அதற்காகவே இந்த கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
அத்துடன், பணி வழங்குபவர்களும், பிரித்தானியர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்றும், அதன் மூலம் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் தங்கள் பங்குக் கடமையை அவர்களும் நிறைவேற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜேம்ஸ்.
அமுலுக்கு வந்தன புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்
ஆக, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டது பிரித்தானிய அரசு. நேற்று முதல், அதாவது, ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயர உள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில், இந்த கட்டணமும், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்புக்கு இணையாக, 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |