சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை
பிரித்தானியாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு திருப்ப ஆவன செய்யவேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய கல்வி அமைச்சரான Nadhim Zahawi, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார்.
சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.
அதாவது, கொரோனாவிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவோம் என்று அவர் கூறாமல், கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளும் ஒரு சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கமுடியும் என்று கூறியுள்ளார் அவர்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த Nadhim Zahawi, உலகம் முழுவதும் காணப்படும் ஒரு கொள்ளைநோயிலிருந்து, உலகின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் தொற்றுநோய் என்ற நிலைக்கு மாறுவது எப்படி என்பதை (pandemic to endemic) உலகுக்குக் காட்டும் முதல் பெரிய நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா இருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீண்ட கால கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், கொரோனாவுடன் வாழ்வது எப்படி என்பது குறித்த திட்டங்களை தீட்டி வருவதாகவும், அவை மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, பிரித்தானியாவில், புதிதாக 141,472 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், முந்தைய ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 151,663 என்பதால், நேற்றைய எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 6.7 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 32.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி 73 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது 97 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.