தலிபான்களை பிரித்தானியா அங்கீகரிக்காது.. ஆனால் இதற்கான அவசியம் இருக்கிறது! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரித்தானியா வெளியுறவு செயலாளர்
தலிபான்களை பிரித்தானியா அங்கீகரிக்காது என்று வெளியுறவுத் துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
ஆனால் போராளி குழுவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை டொமினிக் ராப் ஒப்புக் கொண்டார்.
கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியா வெளியுறவுத் துறை செயலாளர் டொமினிக் ராப், கடந்த மாதம் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகளுக்கள் தங்கியிருக்கும் இடங்களை பார்வையிட்டார்.
தோஹாவில் கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட டொமினிக் ராப், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காது, மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் என்பதை உறுதி செய்வது தொடர்பில் கத்தார் அதிகாரிகளுடன் விவாதித்ததாக கூறினார்.
தலிபான்கள் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தங்கள் பொது உறுதிமொழியை கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது குறித்தும் கத்தார் அதிகாரிகளுடன் விவாதித்ததாக கூறினார்.
ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் பிரித்தானியர்கள் மற்றும் பிரத்தானியாவுக்காக வேலை செய்த ஆப்கானியர்கள் மற்றும் அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய மற்றவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதே எங்களின் தலையாய கடமையாகும்.
மூன்றாவது நாடுகள் மூலம் அவர்களை பாதுகாப்பாக பிரித்தானியா அழைத்து வருவது குறித்து பிராந்திய தலைவர்களுடன் பேசுவார்த்தை நடத்த உள்ளதாக டொமினிக் ராப் கூறினார்.