வெளிநாட்டவர்களுக்கு எதிரான விதி ஒன்றை எதிர்த்து பிரித்தானிய தொண்டு நிறுவனம் வழக்கு
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவதற்காக பிரித்தானிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்று, குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பை 29,000 பவுண்டுகளாக உயர்த்தியது ஆகும். இந்த விதியை எதிர்த்து, பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு
ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி, பிரித்தானிய குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டது. அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில், இந்த கட்டணம், 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வால், பிரித்தானியாவில் வாழும் கணவர் அல்லது மனைவியைக் கொண்ட பிரித்தானியரல்லாதவர்கள், குறிப்பாக, தங்கள் துணையுடன் விரைவில் இணைந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வெளிநாட்டவர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
பிரித்தானிய தொண்டு நிறுவனம் வழக்கு
இந்நிலையில், Reunite Families UK (RFUK) என்னும் தொண்டு நிறுவனம், பிரித்தானிய அரசின், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு உயர்த்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளது. இந்த விதி, குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கைக்கு எதிரானதாகும் என்று கூறி, அந்த விதியை மீளாய்வு செய்யுமாறு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது RFUK அமைப்பு.
மேலும், அந்த விதி, பெண்கள், சிறுபான்மை இனத்தவர் மற்றும் இளைஞர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், சமத்துவ சட்டத்தையும் மீறுவதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தங்கள் குடும்பத்தை ஸ்பான்சர் செய்வதற்காக கடினமாக உழைத்து பணத்தை சேமித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களை இந்த அரசு மீண்டும் தண்டித்துள்ளது, தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துக்கொள்ளும் பலருடைய கனவுகளும் இந்த விதியால் சிதறிவிட்டது என்கிறார் RFUK அமைப்பைச் சேர்ந்த Caroline Coombs என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |