பொதுப்போக்குவரத்தைத் தவிர்க்கவும்: நோய்த்தொற்று பரவல் தொடர்பில் பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில், மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், நோய் பரவாமல் தவிர்ப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்.
அதிகரித்துவரும் நோய்த்தொற்று
பிரித்தானியாவின் பல இடங்களில் மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது.
இந்த மணல்வாரி, எளிதாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். ஆகவே, இந்த தொற்றின் அறிகுறிகள் உடையவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளார், துறைசார் நிபுணரான பேராசிரியர் Beate Kampmann என்பவர்.
அதிக காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் அல்லது மூக்கடைப்பு, தும்மல், இருமல் மற்றும் சிவந்த கண்கள் அல்லது கண்களில் நீர் வடிதல் ஆகியவை இந்த நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகளாகும். சில நாட்களுக்குப் பின், முகம் மற்றும் காதின் பின் பகுதியில் தோன்றும் சிவப்புப் புள்ளிகள் பின்னர் உடல் முழுவதும் பரவத் துவங்கும்.
பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை
உங்கள் பிள்ளைகளுக்கு மணல்வாரி தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தால், உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றியதிலிருந்து நான்கு நாட்களுக்காவது பொதுப்போக்குவரத்தை நிச்சயம் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறார் Cariad Evans என்னும் வைராலஜி துறை நிபுணர்.
குழந்தைகள் உடலில் இந்த சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பும், புள்ளிகள் தோன்றிய நான்கு நாட்களுக்குப் இன்பும், இந்த நோய்த்தொற்று அதிகம் பரவும் என்பதால், அந்த நாட்களில் பிள்ளைகள் வெளியே செல்லாமல் வீட்டிலிருப்பது மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கும் என்கிறார் அவர்.
தொற்று பாதித்த நபருடன், 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஒரு அறைக்குள் தங்கியிருந்தால், தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று கூறும் அவர், ஆகவே, பொதுப்போக்குவரத்து, பள்ளிகள், கடைகள் முதலான மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்.
Credit: NHS
மணல்வாரித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தும்முவதாலும், இருமுவதாலும், மற்றவர்களுக்கு இந்த தொற்று பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி பெறாத பிள்ளைகள் தொற்று பாதித்தவர்களுடன் இருக்க நேரிட்டால், அவர்கள் 21 நாட்கள் வீட்டில் இருக்கவேண்டும். ஏனென்றால், இந்த தொற்று எளிதில் பரவக்கூடியது, ஒருவரிடமிருந்து இந்த தொற்று 20 பேருக்கு பரவும் தீவிரம் கொண்டது. கோவிடை விட 10 மடங்கு அதிகம் பரவக்கூடியது மணல்வாரித் தொற்று என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான Dr Chris Bird என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |