முக்கிய நாட்டிற்காக உளவு பார்த்த பிரித்தானிய தூதரக ஊழியர்: ஜேர்மனி நடவடிக்கை
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய தூதரக ஊழியர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெர்லினில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரக அலுவலகத்தில் வைத்து முக்கிய ஆவணங்களை பணத்திற்காக ரஷ்ய அதிகாரிகளுக்கு கைமாறுவதாக கண்டறிந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டேவிட் என மட்டும் பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த நபரின் குடியிருப்பு மற்றும் பணியிடத்தில் ஜேர்மன் அதிகாரிகளால் தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் கைது சம்பவமானது ஜேர்மன் மற்றும் பிரித்தானியாவின் கூட்டு நடவடிக்கை என்றே தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் 2020 நவம்பர் மாதத்தில் இருந்தே, முக்கிய நாடு ஒன்றிற்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், அவர் எந்த வகையான பிரதிபலனை பெற்றார் என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.