வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய இளம் இசைக்கலைஞர்: வெளிவரும் பின்னணி
முன்னாள் சோவியத் மாகாணமான ஜார்ஜியாவில் பிரித்தானிய இளம் இசைக்கலைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்டு, சுயநினைவற்ற நிலையில் ஆற்றில் வீசியதாகவே தெரிய வந்துள்ளது.
28 வயதான தாமஸ் கென்னடி என்ற இளம் இசைக்கலைஞரே, ஜார்ஜியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர். இந்த வழக்கில் தற்போது ஐவர் கைதாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் மக்கள் சிலருடன் தாமஸ் கென்னடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியதாகவும், பின்னர் அந்த கும்பல் கென்னடியை கொடூரமாக தாக்கி சுய நினைவற்ற நிலையில் Mtkvari ஆற்றில் வீசியுள்ளனர்.
இந்த நிலையில், அக்டோபர் 8ம் திகதி Kvakhvreli கிராமத்தில் கென்னடியின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பொலிசார் ஐவரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கைதான ஐவரும் 2 மாத காலம் விசாரணைக் கைதியாக இருப்பார்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஐவர் மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் நீருபணமானால் 13 முதல் 17 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ம் திகதி கென்னடி ஜார்ஜியாவுக்கு சென்றுள்ளார், மேலும் அவர் ஒரு உள்ளூர் இசைக் கல்லூரியில் மாணவராக பதிவு செய்துள்ளார் என உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.