24 மணி நேரமும் நாற்றம்: வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பிரித்தானிய கிராமத்தினர்
பிரித்தானிய கிராமம் ஒன்றில் மக்கள் 24 மணி நேரமும் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளை மூடிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
அதற்கு காரணம், அந்த பகுதியில் இருக்கும் ஒரு பிரம்மாண்ட குப்பை கொட்டும் இடம். Silverdale என்ற அந்த கிராமத்தின் ஒரு பகுதியில், மலை போல் குவிக்கப்படும் குப்பையால் எப்போதுமே அழுகிய மாமிசம் முதல் மனிதக் கழிவு வரை நாற்றமே நிறைந்து காணப்படுகிறது அங்கு, மக்கள் வீடுகளை பூட்டிக்கொள்வதுடன், நாற்றம் உள்ளே வராமல் தடுப்பதற்காக டேப் மூலம் கதவு ஜன்னல்களை சீல் வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.
துணி காயப்போடவோ, பிள்ளைகள் விளையாடவோ கூட வெளியே செல்ல முடியாது. அத்துடன், அங்கு அமைந்துள்ள கல்லறைகளுக்கு பூக்கள் வைக்க செல்பவர்கள் கூட, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு பூக்களை வைத்துவிட்டு வந்துவிடுகிறார்களாம்.
இந்த குப்பை கொட்டும் இடத்தை நிர்வகிப்பது Red Industries என்ற நிறுவனம். பலத்த புகாருக்குப் பின், குப்பைகள் மேல் சில இடங்களில் களிமண்ணைக் கொட்டி மூடி வருகிறது அந்நிறுவனம், ஆனால் முழுமையாக அல்ல.
இதற்கிடையில், 2026 வரை அந்நிறுவனம் அந்த இடத்தை நிர்வகிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து, மக்களுக்கு இப்போதைக்கு விடிவுகாலம் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.