பாகிஸ்தானில் பிரித்தானிய இளம் பெண் மர்மமான முறையில் சுட்டுக் கொலை! வெளிவரும் பகீர் தகவல்கள்
பாகிஸ்தானில் வாடகை வீட்டில் வசித்து வந்த பிரித்தானிய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயா என மட்டுமே அடையாளம் காணப்பட்ட 26 வயது பெண், இங்கிலாந்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர் கராச்சியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை அவர் தனது வீட்டில் தலையில் சுடப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
மாயாவின் தோழி ஒருவர் அதே வீட்டின் மேல் பகுதியில் ஒரு அறையில் வசித்து வருவதாகவும், அவர் இந்த கொலை சம்பந்தமான விசாரணையில் பொலிஸாருக்கு உதவுவதாகவும் கராச்சி காவல்துறை கண்காணிப்பாளர் சையத் அலி கூறியுள்ளார்.
மாயாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மற்றும் தடயவியல் வல்லுநர்கள் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைத்து சோதனை செய்துவருகின்றனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த மாயாவின் உடல் அருகே ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வீட்டின் அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெண்ணின் பெற்றோர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பிற குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக கராச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களைத் தேடுவதாக கராச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அடையாளம் அறியப்படாத 2 பேர் மாயாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டதாகவும், ஆனால் மாயா இருவரையுமே நிராகரித்து வந்தததாகவும், இதற்கிடையில் நடந்த பிரச்சினையில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.