சுற்றுலா சென்ற 51 பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் தாக்குதல்: வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு சுற்றுலா சென்ற 51 பிரித்தானிய பெண்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதால், அந்நாட்டுக்குச் செல்வது தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்த நாடு துருக்கி
துருக்கி பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. ஆனால், சென்ற ஆண்டு துருக்கிக்கு சுற்றுலா சென்ற 51 பெண்கள் வன்புணர்வு உட்பட பல்வேறு ரீதியில் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்கள்.
குறிப்பாக, கோடைக்காலத்தில் பிரித்தானியர்கள் சென்று தங்கும் கடற்கரையோர சுற்றுலாத்தலங்கள் மற்றும் ரிசார்ட்டுகளில்தான் அதிக அளவில் பாலியல் தாக்குதல்கள் நடக்கின்றனவாம்.
மேலும், வழிப்பறிக் கொள்ளை, பிக் பாக்கெட் போன்ற குற்றச்செயல்களும் துருக்கியில் நடக்கின்றனவாம்.
Credit: Getty
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை
இப்படி பாலியல் தாக்குதல்களும், வழிப்பறிக் கொள்ளை, பிக் பாக்கெட் போன்ற குற்றச்செயல்களும் நடப்பதால் துருக்கிக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் கவனமாக இருகவேண்டும் என்று கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், சுற்றுலாப்பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பகலில் பெண்களை சந்திக்கும் சிலரே, இரவில் அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள வெளியுறவு அலுவலகம், யார் தங்கள் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்றும், மஞ்சள் டெக்சிகளில் மட்டும் பயணிக்குமாறும், அந்த வாகனங்களின் பதிவு எண்களைக்கூட குறித்துவைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மது அருந்தும்போது அளவுக்கு மீறி அருந்தவேண்டாம் என்றும், மற்றவர்கள் தரும் பானங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டாம், அவற்றில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது வெளியுறவு அலுவலகம்.
மேலும், தங்கும் விடுதிகளில் பாஸ்போர்ட் முதலான முக்கிய விடயங்கள் திருடப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாகவும், ஆகவே, துருக்கிக்கு சுற்றுலா செல்வோர் இந்த விடயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் அதிகாரிகளை அணுகுமாறும் வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Credit: Getty