ஜேர்மனியில் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட பெண்! பிரித்தானியர் மீது சந்தேகம்.. 33 வருடங்கள் கழித்து தூசி தட்டும் வழக்கு!
ஜேர்மனியில் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் சீரழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை பொலிஸார் தற்போது மீண்டும் தூசி தட்டி கையில் எடுத்துள்ளனர்.
குறித்த வழக்கில், தற்போது DNA ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் Celle நகரத்தில் உள்ள Wathlingen எனும் பகுதியில், கடந்த 1988-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் திகதி, ரெஜினா பிஸ்சேர் (Regina Fischer) எனும் 20 வயது பெண் காணாமல் போனார்.
மறுநாள், Hassel அருகே 300 அடி தூரத்தில் B3 motorway சாலை பகுதியில், ரெஜினா நிர்வாணமாக இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பிறகு கழுத்து நெரிக்கப்பட்டு, உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரெஜினாவின் தந்தை எர்வின் (63) கூறுகையில், " ரெஜினா சாலையில் சென்றுகொண்டு இருக்கும்போது, யாரோ வழிப்போக்கர் வழிநிறுத்தி உதவி கேட்டுள்ளனர் என நினைக்கிறேன், இல்லையெனில் அவர் சாலையில் வேறு எந்த காரணத்திற்காகவும் வாகனத்தை நிறுத்தியிருக்க மாட்டார்" என கூறினார்.
சம்பவம் நடந்தபோது ரெஜினாவின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட விந்து மூலமாக, தற்போது DNA தரவுகள் ஆதாரங்களாக சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த DNA பிரித்தானியர்களின் DNA-உடன் ஒத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், ரெஜினா கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகே அப்போது ஒரு பிரித்தானிய இராணுவ படையினர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், ஒரு பிரித்தானியர் இந்த குற்றத்தை செய்திருக்கலாம் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அந்த DNA ஆதாரத்தை பிரித்தானியாவுக்கு அனுப்பி, அங்குள்ள அரசாங்க தரவுகள் மூலமாக குற்றவாளியை தேடும் முயற்சியில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.