அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு புதிய கட்டுப்பாடு
அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு வரி ஒன்று விதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள், பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளாகும். அப்படியிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு முதல், இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், 7 யூரோக்கள், அதாவது 6 பவுண்டுகள் வரி செலுத்தவேண்டும் என ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, ஐரோப்பிய ஒன்றியம், புதிய பயணத் திட்டம் ஒன்றை உருவாக்க முயன்று வருகிறது. அதன்படி, பிரித்தானியா முதலான 62 ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள், Schengen எல்லைக்குள் நுழையும்போது கட்டணம் ஒன்றைச் செலுத்தவேண்டியிருக்கும்.
ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு (ETIAS), தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவோரைக் குறித்த விவரங்கள், குறிப்பாக, அவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களா என்பது முதலான விவரங்களை அறிந்துகொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதியளிக்கும்.
இதே போன்றதொரு திட்டம் அமெரிக்காவிலும் நடைமுறையில் உள்ளது. அது அமெரிக்காவின் பயண அங்கீகார மின்னணு அமைப்பு என அழைக்கப்படுகிறது. அந்த திட்டத்தின்படி, அமெரிக்கா, 39 நாடுகளின் குடிமக்களை 90 நாட்களுக்கு விசா இன்றி அமெரிக்காவுக்குள் அனுமதிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகார அமைப்போ, மூன்று ஆண்டுகளுக்கு பயணிகளை அனுமதிப்பதுடன், பல முறை பயணிக்கவும் அனுமதிக்க உள்ளது.
இந்த திட்டம் 2022 இறுதிவாக்கில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இப்படி தன் நாட்டுக்குள் நுழைவோரை கட்டுப்படுத்த திட்டங்களை அறிமுகம் செய்யும் நிலையில், பிரித்தானியாவும் பிரித்தானியர்களல்லாதவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் இதேபோன்றதொரு திட்டத்தை 2024வாக்கில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.