பிரித்தானியர்கள் 1,000 பவுண்டுகள் வரையில் அபராதம் செலுத்த நேரலாம்: அமுலுக்கு வந்த தடை உத்தரவு
பிரித்தானியாவில் சமீபத்திய வெப்பச்சலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் தண்ணீர் குழாய்த் தடை அமுலுக்கு வந்துள்ள நிலையில், மீறுபவர்களுக்கு 1,000 பவுண்டுகள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாச்சவும் கார்களை சுத்தம் செய்யவும் குறிப்பிட்ட குழாய்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அலங்கார குளங்கள் மற்றும் நீச்சல் குளங்களும் தண்ணீர் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 5ம் திகதி அமுலுக்கு வரவிருக்கும் குறித்த தடை உத்தரவை மீறும் வாடிக்கையாளர்கள் 1,000 பவுண்டுகள் வரையில் அபராதம் செலுத்த நேரிடும், மேலும் இந்த தடை உத்தரவானது ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் பிராந்தியத்தில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்களை பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
2012க்கு பின்னர் குறித்த பகுதியில் இந்த தடை உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் தண்ணீர் வழங்கல் முறைப்படி முன்னெடுக்கப்படும் என்றே Southern Water நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் முதல் முறையாக 40C க்கும் அதிகமான வெப்பநிலையுடன் பிரித்தானியா அதன் உச்ச வெப்பமான நாளை பதிவு செய்திருந்தது. சுட்டெரிக்கும் வானிலை நாடு முழுவதும் பல காட்டுத் தீக்கு வழிவகுத்ததுடன், பல குடும்பங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மட்டுமின்றி, வரலாற்றில் மிகவும் வறண்ட ஆண்டுகளில் ஒன்றின் விளைவாக நதி நீர் நிலைகளும் 25 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக Southern Water நிறுவன அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.