வெளிநாடு செல்ல பிரித்தானியர்களுக்கு 3 தடுப்பூசி தேவைப்படும்: வெளியாகும் புதிய தகவல்
அடுத்த ஆண்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கும் பிரித்தானியர்களுக்கு 3 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி தடுப்பூசி கடவுச்சீட்டு முறையிலும் மாறுதல்கள் ஏற்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் 50 வயதுக்கு உட்பட்ட பிரித்தானியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்கப்படும் வாய்ப்புகள் மிக குறைவு என்றே அரசு வட்டாரத்தில் இருந்து வெளியாகும் தகவல் எனவும் கூறப்படுகிறது.
தடுப்பூசி கடவுச்சீட்டு அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் கில்லியன் கீகன் கூறியுள்ள நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிக்கு பின்னரே, தடுப்பூசி கடவுச்சீட்டு அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும், ஆனால் தற்போது தான் பூஸ்டர் தடுப்பூசி திட்டம் துவக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பூஸ்டர் தடுப்பூசியானது ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களுக்கும் இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு மேலும் 6 மாதங்களுக்கு பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் இன்னும் காலதாமதமாகலாம் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.