Universal Credit... அப்பாவி குடும்பங்களின் வயிற்றிலடித்த போரிஸ் அரசாங்கம்: வெளிவரும் புதிய ஆய்வு
போரிஸ் ஜோன்சன் அரசின் இரக்கமற்ற Universal Credit திட்டம் ரத்தால் பிரித்தானியாவில் 54 முக்கிய தொகுதிகளில் உள்ள குடும்பங்களின் வருவாயில் சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Universal Credit என்ற திட்டத்தால் பிரித்தானியாவில் பல குடும்பங்கள் வாரம் 20 பவுண்டுகள் என ஊக்கத் தொகை பெற்று வந்தனர். தற்போது போரிஸ் ஜோன்சன் அரசு அந்த திட்டத்தை அதிரடியாக ரத்து செய்து, அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.
இந்த நிலையில் Universal Credit திட்டம் ரத்து செய்துள்ளதால் பிரித்தானியாவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதி எதுவென முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் முக்கியமாக, தொழிலாளர் கட்சிக்கு சாதகமாக இருந்து, 2019ல் போரிஸ் ஜோன்சன் கட்சிக்கு வாக்களித்த 54 தொகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த 54 தொகுதிகளில் உள்ள 340,000 சிறார்கள் உட்பட சுமார் 501,370 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, குறைந்தபட்ச ஊதியத்திற்கு பணியாற்றிவரும், இப்பகுதியில் உள்ள 200,000 பேர்கள், ஆண்டுக்கு 1000 பவுண்டுகளுக்கு மேல் வருவாயை இழக்கின்றனர்.
போரிஸ் அரசாங்கத்தின் இந்த இரக்கமற்ற முடிவால் பல மில்லியன் குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார் என ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உச்சம் தொடும் விலை உயர்வால் ஏற்கனவே பல குடும்பங்கள் அன்றாடம் அல்லல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தொழிலாளர் கட்சி முன்னெடுத்த ஆய்வு ஒன்றில், தங்களுக்கு சாதகமாக இருந்து பின்னர் போரிஸ் அரசாங்கத்திற்கு வாக்களித்த 9 தொகுதிகளில் உள்ள 12,000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
முக்கியமாக பிளாக்பூல் தெற்கு, போல்டன் வடகிழக்கு, பர்ன்லி மற்றும் ஹேவுட் மற்றும் மிடில்டன் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. Universal Credit திட்டம் ரத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக பீற்றர்பரோ பார்க்கப்படுகிறது.
இங்குள்ள 13,000 சிறார்கள் உட்பட 18,360 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குடும்பங்களுக்கான வருவாயில் 19 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதேப்போன்று, பர்மிங்காம் நார்த்ஃபீல்ட் உட்பட பல முக்கிய தொகுதிகளில் மக்கள் வருவாய் இழப்பை எதிர்கொள்கின்றனர் என்றே தெரிய வந்துள்ளது.