பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனி அறை... பொதுமக்களுக்கு முதல் முறையாக திறப்பு
பக்கிங்ஹாம் அரண்மனையின் பெருமை வாய்ந்த பால்கனி அறை முதல் முறையாக பொதுமக்களுக்கு திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராணியின் குடும்ப உறுப்பினர்கள்
பார்வையாளர்கள் அரண்மனையின் கிழக்குப் பகுதிக்கு வழிகாட்டப்பட்ட பார்வையிடலை மேற்கொள்ள முடியும். குறித்த பால்கனியானது சிறப்பு நாட்களில் அரச குடும்பத்தினர் பொதுமக்களை முகம் காட்டுவதற்கு என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விக்டோரியா மகாராணியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் அரண்மனையின் கிழக்குப் பகுதி 1847 மற்றும் 1849 ஆண்டுகளுக்கு இடையில் விரிவாக்கப்பட்டது.
தற்போது நீண்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியின் முதன்மை தளம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திறக்கப்பட உள்ளது.
புதிய அனுபவமாக இருக்கும்
குறித்த பகுதியானது 369 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் 10 ஆண்டுகளுக்கான சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அரண்மனையின் கிழக்குப் பகுதியானது 75 பவுண்டுகள் கட்டணத்தில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
பொதுவாக அரண்மனையின் குறிப்பிட்ட அறைகளை பார்வையிட 35 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு 5 பவுண்டுகள் விலை குறைப்பும் அளிக்கப்படுகிறது.
அரண்மனையின் இந்த முடிவு பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால், பெருமை வாய்ந்த அந்த பால்கனியின் திறந்தவெளியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, அந்த அறையில் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஏப்ரல் 9ம் திகதி முதல் முன்பதிவு துவங்க உள்ளனர். ஜூலை 15 முதல் ஆகஸ்டு 31 வரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |