டயானா குறித்து சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்: அரண்மனை பதிலடி
Buckingham Palace denies Charles said Diana would be forgotten soon enough: இளவரசி டயானா விரைவில் மறக்கப்பட்டு போவார் என சார்லஸ் கூறியதாக கூறப்படும் விடயத்தை பக்கிங்காம் அரண்மனை மறுத்துள்ளது.
இளவரசி டயானாவின் சகோதரரான எர்ல் ஸ்பென்சர், டயானா குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்: ‘Swan Song: Diana, My Sister’ என்பது அந்த புத்தகத்தின் பெயர்.

டயானாவின் இறுதிச்சடங்கின்போது, அவரது சவப்பெட்டிக்குப் பின்னால் அவரது பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியமும், ஹரியும் நடந்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்துள்ளது.
சார்லஸ் மோசமாக பேசியதாகக் கூறும் சகோதரர்
அதற்கு டயானாவின் சகோதரரான ஸ்பென்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சார்லசிடம் தொலைபேசியில் பேசிய அவர், தன் பிள்ளைகள் இப்படி தன் சவப்பெட்டிக்குப் பின்னால் நடப்பதை டயானா விரும்பியிருக்கமாட்டார் என்று கூற, அந்த விடயம் சார்லசை கோபப்படுத்தியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்பென்சர்.
’சார்லஸ், டயானா மீது தனக்கிருந்த அடக்கிவைத்த அவமதிப்பையும், அவரது மரணத்தால் உலகம் இவ்வளவு நிலைகுலைந்து போனதைக் கண்டு ஏற்பட்ட திகிலையும் தொலைபேசியில் என்னிடம் கொட்டித் தீர்த்தார்.

நிச்சயமாக டயானா விரைவில் மறக்கப்பட்டுபோவார் என்றும் சார்லஸ் கூறினார்’ என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ஸ்பென்சர்.
அரண்மனை பதிலடி
இந்நிலையில், ஸ்பென்சரின் கூற்றுக்கு பக்கிங்காம் அரண்மனை பதிலடி கொடுத்துள்ளது. ‘கொள்கை ரீதியாக நாங்கள் புத்தகங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதில்லை என்றாலும், சகோதரப் பிரிவின் துயரம், அத்தகைய இழப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, பகுத்தறிவை மழுங்கடித்து, முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, மற்றவர்கள் அடையாளம் காண முடியாத வழிகளில் நினைவுகளுக்குச் சாயம் பூசிவிடும் என்பதை மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்கள் உணர்ந்திருக்கிறார்’ என்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஸ்பென்சரின் அந்தக் கூற்றை அரண்மனை நிராகரித்துள்ளது. ஏனென்றால், ஆழ்ந்த இரக்க குணம் கொண்டவரும், அந்த நேரத்தில் தனது சொந்தத் துயரத்தையும், தனது இரண்டு மகன்களின் துயரத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தவருமான ஒரு மனிதர் மீது இப்படி ஒரு கருத்தை முன்வைப்பது முற்றிலும் தவறு என அரண்மனை வட்டாரம் கருதுகிறது.

மேலும், மன்னரின் முன்னாள் தகவல் தொடர்புச் செயலாளரான ஜூலியன் பெய்ன் என்பவர், எனக்குத் தெரிந்தவரை, மன்னர் அப்படி பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.
ஆகவே, ஸ்பென்சர் கூறியுள்ள தவறான கருத்தை சரிசெய்ய வேண்டும் என அரண்மனை கருதியதே, அவர்கள் வெளியே வந்து தைரியமாக இப்படி வழக்கத்துக்கு மாறாக ஒரு கருத்தை முன்வைக்கக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.