இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்: கண்ணீரில் பிரித்தானிய அரச குடும்பம்
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் உடல் வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ரகசிய பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கான அந்த பிரத்யேக பெட்டகத்தில் இதுவரை 24 அரச குடும்பத்து உறுப்பினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
200 ஆண்டுகள் பழமையான அந்த பெட்டகமானது அரச குடும்பத்தினருக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆறடி ஆழத்தில் மட்டுமே பொதுமக்கள் இறந்தால் அடக்கம் செய்யப்படுவார்கள்,
ஆனால் அரச குடும்பத்து உறுப்பினர்களை 16 அடி ஆழத்தில் நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கம். இதனடிப்படையில், இளவரசர் பிலிப்பின் உடல், பின்னாளில் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் நினைவு சேப்பலுக்கு மாற்றப்படும்.
அந்த நிகழ்வானது, காலமான இளவரசர் பிலிப்பின் மனைவியும் பிரித்தானியாவின் ராணியாருமான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் நடந்தேறும் என்றே கூறப்படுகிறது.
ராணியாரின் மறைவுக்கு பின்னர், அவரின் விருப்பத்திற்கு ஏற்ப இருவரது உடலும் ஒன்றாகவே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அதுவரையில் இளவரசர் பிலிப்பின் உடல் உரிய மரியாதையுடன் வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலின் ரகசிய பெட்டகத்தில் பாதுகாக்கப்படும்.
குறித்த பெட்டகத்தை அரச குடும்பத்து உறுப்பினர்கள் அடிக்கடி வந்து பார்வையிட்டு, மரியாதை செலுத்தி செல்வது பாரம்பரியமாக பாதுகாக்கப்படுகிறது.
1885 ஆம் ஆண்டில் விண்ட்சர் கோட்டையில் பிறந்த இளவரசர் பிலிப்பின் தாய் இளவரசி ஆலிஸ், அவர் 1969 இல் இறந்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட ஆறாம் ஜார்ஜ் மன்னரின் நினைவு சேப்பலில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இதே சேப்பலில், பின்னாளில் ராணியாரின் மறைவுக்கு பிறகு, இளவரசர் பிலிப்பின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும்.
இறுதிச் சடங்குகளில் பங்கேற்ற இளவரசர் சார்லஸ் கண்ணீர் அடக்க முடியாமல் தத்தளித்ததும், இளவரசி ஆன் தமது தந்தையின் இறுதி ஊர்வல வாகனத்தின் மிக அருகாமையிலேயே நடந்து சென்றதும்,
ஜார்ஜ் சேப்பலுக்குள் ராணியார் இரண்டாம் எலிசபெத் தன்னந்தனியாக சடங்குகளில் பங்கேற்றதும் பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.