மாணவர்கள் முன்னிலையில்... பாடசாலை பேருந்தில் ரத்தக்களரி சம்பவம்: பதறிப்போன பெற்றோர்
அமெரிக்காவில் ஆரம்ப பள்ளி சிறார்கள் முன்னிலையில் பாடசாலை பேருந்து சாரதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளி பேருந்து சாரதியே வெள்ளிக்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 72 வயதான Richard Lenhart என்பவரே ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு காயங்கள் காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்தவர்.
பாஸ்கோவில் உள்ள லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளியில் சாரதி லென்ஹார்ட் குழந்தைகளை அழைத்துச் சென்றபோது, சந்தேகநபர் பேருந்தில் ஏறியதுடன் அவரை மூர்க்கத்தனமாக கத்தியால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தின் போது பேருந்தானது சாலையில் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் சாரதி லென்ஹார்ட் தாக்குதலுக்கு இலக்காகவும், கட்டுப்பட்டை இழந்த பேருந்து தடுப்பு வேலியில் மோதி நின்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மாணவர்கள் எவரும் காயப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பாஸ்கோ பொலிசார், தாக்குதல்தாரியை சம்பவயிடத்தில் இருந்தே கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை நேரில் கண்ட குழந்தைகளை பேருந்தில் இருந்து வெளியேற்றி, அவர்கள் பெற்றோர்கள் வந்து கூட்டிச்செல்லும் வரையில் பாடசாலை நிர்வாகம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவையெனில் அதற்கும் ஏற்பாடு செய்ய பாடசாலை நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்தானது விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், திங்கட்கிழமை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சாரதி Richard Lenhart தாக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.