பாலியல் வீடியோ அழைப்பு வலையில் சிக்கி ரூ.2.7 கோடி இழந்த தொழிலதிபர்
குஜராத் தொழிலதிபர் ஒருவர் 'செக்ஸ்ட்ராஷன்' எனும் ஓன்லைன் பாலியல் வீடியோ அழைப்பு வலையில் சிக்கி ரூ. 2.69 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை நடத்தி வரும் பாதிக்கப்பட்ட தொழிலதிபருக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் திகதி மோர்பியைச் சேர்ந்த ரியா ஷர்மா என்று தன்னை அடையாளப்படுத்திய பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.
அப்பெண் அடிக்கடி அவருடன் பாலியல் வீடியோ அழைப்பில் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்ந்து நடக்க, பின்னர் ஒரு வீடியோ அழைப்பின்போது ஆடைகளை கழற்றுமாறு தொழிலதிபரை சமாதானப்படுத்தியுள்ளார் ரியா ஷர்மா.
தொழிலதிபரும் பரவரசமாக அப்பெண் சொல்வதையெல்லாம் செய்ய, திடீரென அழைப்பை துண்டித்தார் ரியா. தொழிலதிபரின் செயல்களை வீடியோ ரெக்கார்டிங் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தொழிலதிபரின் நிர்வாண வீடியோ கிளிப் பரப்பப்படாமல் இருக்க அவரிடம் முதலில் ரூ. 50,000 கேட்கப்பட்டது.
அதோடு முடியவில்லை., சில நாட்களுக்குப் பிறகு, தொழிலதிபருக்கு டெல்லி காவல்துறையின் இன்ஸ்பெக்டர் குட்டு ஷர்மா என்று கூறி ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த வீடியோ கிளிப் இப்போது தன்னிடம் இருப்பதாகக் கூறி ரூ.3 லட்சம் பறித்துள்ளார்.
ஆகஸ்ட் 14 அன்று, டெல்லி பொலிஸ் சைபர் செல் பணியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மற்றொரு நபர், அந்த ரியா ஷர்மா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி ரூ.80.97 லட்சத்தை கேட்டு வாங்கியுள்ளார்.
இப்படி தொடர்ந்து அவர் பணத்தைச் செலுத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மத்திய புலனாய்வு நிறுவனத்தை அணுகியதாகக் கூறி, அந்த வழக்கைத் தீர்ப்பதற்கு ரூ. 8.5 லட்சம் கேட்டு போலி சிபிஐ அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது.
பின்னர் டெல்லி உயர்நீதிமன்றம் என்றல்லாம் கூறி, டிசம்பர் 15 வரை தொடர்ந்து பணம் பிரித்துள்ளனர்.
பின்னர் வழக்கை முடித்துவிட்டதாகக் கூறப்பட்ட உத்தரவு தொழிலதிபரை சந்தேகத்திற்குரியதாக்கியது. பின்னர் அவர் ஜனவரி 10-ஆம் திகதி சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தை அணுகி, 11 பேர் மீது ரூ.2.69 கோடியை மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தார்.
இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 387 (பணம் பறித்தல்), 170 (பொது ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல்), 465 (போலி செய்தல்) 420 (ஏமாற்றுதல்), மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகிய பிற குற்றங்களின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.