ரயில் வந்துகொண்டிருக்கும்போது சக்கர நாற்காலியுடன் ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபரால் பரபரப்பு
அமெரிக்காவில், ரயில் நிலையம் ஒன்றில் ரயில் வந்துகொண்டிருக்கும்போது, சக்கர நாற்காலியுடன் ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரிலுள்ள Union Square ரயில் நிலையத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் தனது சக்கர நாற்காலியுடன் விழுந்தார்.
ரயில் வர இன்னமும் சிறிது நேரமே இருக்கும் நிலையில், ரயில் தண்டவாளத்தில் ஒருவர் சக்கர நாற்காலியுடன் விழுந்ததால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் சட்டென ரயில் பாதையில் குதித்து, விழுந்து கிடந்த நபரை தூக்க, அருகே நின்றவர்களும் சேர்ந்து அவரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார்கள். அதற்குள் அவரைத் தூக்கியவர் விழுந்தவரின் சக்கர நாற்காலியையும் எடுத்து மேலே நின்றவர்களிடம் கொடுத்துவிட்டு தானும் மேலேறி விட்டார்.
ரயில் வந்துவிடுமோ என மக்கள் பதற்றத்துடன் நிற்க, யார் செய்த அதிர்ஷ்டமோ, சில விநாடிகளுக்குப் பிறகே நிலையத்துக்குள் நுழைந்தது ரயில்.
ரயில் தண்டவாளத்தில் விழுந்த அந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி தண்டவாளத்தில் குதித்து, விழுந்தவரைக் காப்பாற்றிய அந்த கருணை உள்ளம் கொண்ட நபர் தன் பெயரைக் கூட தெரிவிக்காமல் அமைதியாக சென்றுவிட்ட நிலையில், மக்களோ அவரை ஹீரோ என புகழ்கிறார்கள்.