ஹீத்ரோ விமான நிலையத்தில் வரிசையில் காத்திருந்த டாக்ஸி சாரதி மரணம்: வெளியான அதிர்ச்சி பின்னணி
ஹீத்ரோ விமான நிலையத்தில் தமது அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த கருப்பின டாக்ஸி சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
56 வயதான அந்த சாரதி தமது அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னரே அவர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை மதியமே சக சாரதிகளால் அவர் மரணமடைந்துள்ள சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் வருவாய் ஏதுமின்றி அல்லல் படும் டாக்ஸி சாரதிகள் தற்போது விமான நிலையத்திற்கு வெளியே காத்துக்கிடக்கின்றனர்.
மட்டுமின்றி சமீப காலமாக சர்வதேச பயணிகளின் வருகையும் 60% அளவுக்கு குறைந்துள்ளதால், தங்களுக்கான வாழ்வாதாரமும் பாதித்துள்ளதாகவும் டாக்ஸி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
லண்டனின் முதன்மை விமான நிலையத்தின் வெளியே டாக்ஸி சாரதிகள் பலர் தங்கள் வாய்ப்பு வரும் வரையில் 24 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் காத்துக்கிடக்கின்றனர்.
வரிசையில் நின்று இடையே வெளியேறினால், இன்னும் பல மணி நேரம் காத்திருக்க நேரிடும் என்பதால், தங்கள் வரிசையில் இருந்து எவரும் விலகிச்செல்வதில்லை.
தற்போது மரணமடைந்துள்ள கருப்பின டாக்ஸி சாரதி, பொதுவாக தமது வாகனத்திலேயே இரவை கழிப்பதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதால், அவர் தேவைக்கும் சாப்பிடுவதில்லை என கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தற்போது வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.