கேம்பிரிட்ஜ் பல்கலையில் உண்ணாவிரதப் போராட்டம்: ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இந்திய மாணவர்
கடந்த 24 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
தகுதியின்றி உறவினர்களுக்கு பதவி
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஊழல் மற்றும் தகுதியின்றி உறவினர்களுக்கு பதவி அளித்தல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 24 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் கேம்பிரிட்ஜ் மாணவர் சங்கத்தின் முதுகலைப் பட்டதாரி தலைவர் Vareesh Pratap.
இந்த நிலையில் அவர் சுயநினைவை பாதி இழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 14ம் திகதி 'ஜனநாயகத்தைக் கொல்வதை நிறுத்து' என்ற தலைப்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் கடிதம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ள பிரதாப்,
கேம்பிரிட்ஜ் மாணவர் சங்கம் என்பது தற்போது குடும்ப வணிகமாக மாறிவிட்டது என்று குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த கடிதத்தில் 5 கோரிக்கைகளை முன்வைத்திருந்த பிரதாப், சமீபத்தில் நடைபெற்ற மாணவர் அறங்காவலர் தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அத்துடன் முறையான விளம்பரம் இன்றி பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் நியமனங்களை ரத்து செய்தல் மற்றும் மாணவர் சங்க நிதிகளின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு
மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தில் இனவாத கேலியும் கிண்டலும் அதிகரித்துள்ளதாகவும் பிரதாப் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுவரை 279 பேர்கள் கையெழுத்திட்ட பிரதாபின் அந்த கடிதத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல்பாடுகளால் மேலும் பல அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டுவிட தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றே பிரதாப் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, பிரதாபின் வெளிப்படையான கடிதம் 200 கையெழுத்தைப் பெற்றுள்ள நிலையில் ஜூன் 10ம் திகதி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மாணவர் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இருப்பதாக ஜூன் 1ம் திகதி மாணவர் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, பிரதாப் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரீஷ் பிரதாப் என்பவர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சிவகுமார் சதுர்வேதி இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |