கணவரின் இறுதிச்சடங்கின்போது தனிமையில் அமர்ந்திருந்த மகாராணியார்: நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கிய சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள கோரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில், தன் கணவரின் இறுதிச்சடங்கின்போது பிரித்தானிய மகாராணியார் தனிமையில் அமர்ந்திருந்த ஒரு காட்சி, நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து, நேற்று இரவு, மதத்தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இறுதிச்சடங்குகளின்போது விதிக்கப்பட்டுள்ள மனிதத்தன்மையற்ற இந்த கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என நிப்பந்தித்துள்ளார்கள்.
நண்பர்களும் உறவினர்களும் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் அந்த நேரத்திலாவது, 30 பேர்தான் இறுதிச்சடங்குகளில் பங்கேற்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை மாற்றவேண்டும் என அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
சனிக்கிழமை, இளவரசர் பிலிப்புடைய இறுதிச்சடங்கின்போது, அருகில் யாரும் இல்லாமல் மகாராணியார் மட்டும் தனியாக அமர்ந்திருந்த அந்த துயரக் காட்சியைக் கண்ட அனைவருமே, அந்த இடத்தில் தங்களை வைத்துப் பார்த்திருக்கிறார்கள்.
73 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த தன் கணவரை பிரிந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கின்போது ஆறுதல் கூறக்கூட யாருமின்றி, மகாராணியார் தனித்து விடப்பட்ட சம்பவம் கொடூரமானது என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் நிலையில், உடனடியாக அவற்றை மீளாய்வு செய்யுமாறு பல கட்சிகளின் உறுப்பினர்கள் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அத்துடன், மரணம் போன்ற துயர நிகழ்வுகளின்போது தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் வகையில், உடனடி கொரோனா பரிசோதனைகள் அல்லது தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு அவர்கள் அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார்கள்.