கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
சமீபத்திய அறிக்கைகள் கொரோனா தடுப்பூசிகள் மாதவிடாய் சுழற்சிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பல பெண்கள் தடுப்பூசி செலுத்துவதற்கே அச்சம் கொள்கின்றனர்.
உண்மையில் கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ஆய்வு கூறுவது என்ன?
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாதவிடாய் சுழற்சி மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து மருத்துவத் துறையில் விரிவான ஆய்வும் தேவை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட 30,000 பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஆளாகி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யூகே மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்கு முறை முகமை மறுத்துள்ளது.
தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியை மாற்றுமா ?
கொரோனா வைரஸ் தடுப்பூசியால் மாதவிடாயில் தாமதம் அல்லது விரைவான மாதவிடாய் காலம், எதிர்பாராத இரத்தப்போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவு தான் என இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை.
மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள், அதிக இரத்தப்போக்கு அல்லது தாமதமான மாதவிடாய் போன்றவை தடுப்பூசிக்குப் பின்னர் ஏற்படுகிறதா என்பதை பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களின் கூற்றுப்படி, இதுபோன்ற பக்கவிளைவுகள் தற்காலிகமானவை தான். அதற்கடுத்த மாதத்தில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது என்றும் கூறுகின்றனர். இதனால் கவலை கொள்ளத் தேவையில்லை.