இனி ரஷ்யாவுடன் உறவு என்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது: ஜேர்மனி உறுதி
ரஷ்யாவுடன் கூட்டணி என்பது இனி கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத விடயம் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
நேற்று ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், நேட்டோ நாடுகள் ஜேர்மனியை நம்பலாம் என்று கூறினார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபோது, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் தயக்கம் காட்டிய ஷோல்ஸ், தாமதமாகத்தான் ஆயுதங்கள் வழங்க சம்மதித்தார்.
ஆகவே, அவரது உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. சொன்னதை நிரூபிக்கும் வகையில் அவர் ஏற்கனவே உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களையும் அனுப்பியுள்ளார். அவற்றை பெற்றுக்கொண்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனி தன் சொந்த பாதுகாப்புக்காக மட்டுமின்றி தனது கூட்டாளிகளின் பாதுகாப்புக்காகவும் பொறுப்பேற்றுள்ளது என்று கூறிய ஷோல்ஸ், ஆகவே பாதுகாப்புக்கான நிதியை 100 பில்லியன் யூரோக்களாக உயர்த்த நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்ததன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு சர்வாதிகாரியைப்போல கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ள நிலையில், இனி உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பது கடினம் என்றார் அவர்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, வம்புச் சண்டைக்குச் செல்லும் புடினுடைய ஏகாதிபத்திய ரஷ்யாவுடன், எதிர்காலத்தில் கூட்டணி என்பது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத விடயம் என்றார் ஷோல்ஸ்.