இதை செய்யாவிட்டால் கொள்ளைநோயிலிருந்து விடுபட முடியாது: ஜேர்மன் சேன்ஸலர்
கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்காவிட்டால், தடுப்பூசி பெறுவோர் வீதத்தை அதிகரிக்கவும் முடியாது, கொள்ளைநோயிலிருந்து வெளியேறவும் முடியாது என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
கொரோனா தொற்று சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைப்பது முதிர்ச்சியற்ற செயல் என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, மூன்று மாதங்களில் அற்புத விதமாக கொள்ளைநோய் காணாமல் போய்விடும் என்று நம்புவது மாயை என்கிறார்.
ஆகவே, தடுப்பூசியைக் கட்டாயமாக்காவிட்டால், நாடு கொள்ளைநோயிலிருந்து விடுபடும் அளவுக்கு தடுப்பூசி பெற்றோர் வீதத்தை அதிகரிக்கமுடியாது என்கிறார் அவர்.
நாளை மறுநாள், புதன்கிழமை, ஜேர்மன் நாடாளுமன்றம் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது தொடர்பில் விவாதிக்க உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஜேர்மனியில் ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 85,440 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்ற எண்ணிக்கையும் முதன்முறையாக 806.8ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.