கனடா பட்ஜெட்: தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கை கணிசமாக குறைப்பு
கனடா வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளது.
கனடா பட்ஜெட்
நேற்று கனடாவின் ஃபெடரல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு, 673,650 பேருக்கு தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.
அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.
விடயம் என்னவென்றால், 2026இல் 516,000 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இருப்பதாக புலம்பெயர்தல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதை 385,000ஆக அரசு குறைத்துள்ளது. இந்த மாற்றம், தற்காலிக குடியிருப்பு அனுமதிகளைக் குறைப்பதன்மூலம் கனடாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுகிறது.
கனடாவில் புலம்பெயர்தல் அதிகமாகிவிட்டதாக கனேடிய மக்கள் கருதத் துவங்கிவிட்ட நிலையில், வெற்றிபெறும் அரசியல் கட்சிகளை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற விடயமாகிவிட்டது புலம்பெயர்தல்.
ஆகவே, மக்களை திருப்திப்படுத்துவதற்காக அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.
உண்மை என்னவென்றால், இந்த நிலை கனடாவில் மட்டுமல்ல, பல மேற்கத்திய நாடுகள் இந்த நிலைப்பாட்டுக்கு மாறிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |