கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல்
கனேடிய ஆய்வாளர் ஒருவர், இந்திய வம்சாவளி ஆய்வாளர் ஒருவர், மற்றும் சில நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து புதிய ஆன்டிபயாட்டிக் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆன்டிபயாட்டிக் என்பது என்ன?
1928ஆம் ஆண்டு, ஸ்கொட்லாந்து நாட்டவரான அலெக்சாண்டர் ஃப்ளெமிங் என்னும் அறிவியலாளர், ஸ்டெபைலோகாக்கஸ் என்னும் பாக்டீரியா ஒன்றை வைத்து ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார்.

ஒருநாள், மறதியாக பாக்டீரியா வளர்க்கும் தட்டு ஒன்றை அவர் திறந்தே வைத்துவிட்டார் ஃப்ளெமிங். மறுநாள் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த பாக்டீரியா வளர்க்கும் தட்டில், காற்றில் பறந்துவந்த பெனிசிலியம் என்னும் பூஞ்சை வளர்ந்திருந்ததை அவர் கண்டார்.
அப்போது, தற்செயலாக அவரது கண்களில் ஒரு விடயம் தென்பட்டது. ஆம், அந்த பூஞ்சை வளர்ந்திருந்த இடங்களைச் சுற்றியிருந்த பாக்டீரியா காணாமல் போய்விட்டிருந்தது.
அவர் அறிவியலாளர் அல்லவா! ஆழ்ந்து யோசிக்கத் துவங்கினார். விளைவு, அந்த பெனிசிலியம் என்னும் பூஞ்சை, பாக்டீரியாக்களைக் கொல்லக்கூடிய ஒரு திரவத்தை வெளியிடுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்.
அப்படித்தான் உலகில் முதல் ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. பெனிசிலியம் என்னும் பூஞ்சையிலிருந்து அந்த ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு பெனிசிலின் என்னும் பெயரிட்டார் ஃப்ளெமிங்.
முதல் உலகப்போரில் காயம்பட்ட ஏராளம் வீரர்கள் கிருமித் தொற்றால் உயிரிழந்திருந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின்போது பெனிசிலின் ஆன்டிபயாட்டிக் இருந்ததால் ஏராளம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
காலப்போக்கில் பல்வேறு ஆன்டிபயாட்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. விடயம் என்னவென்றால், ஆன்டிபயாட்டிக்குகள் எண்ணிக்கை பெருகப் பெருக, கிருமிகள் அதை எதிர்க்கும் தன்மையை வளர்த்துக்கொண்டன.
அதாவது, ஆன்டிபயாட்டிக் சிகிச்சை அளித்தாலும் கொல்லப்படாத கிருமிகள் உருவாகின. அவை drug-resistant bacteria என அழைக்கப்படுகின்றன.
2050 வாக்கில், புற்றுநோயால் உயிரிழப்போரைவிட, இந்த drug-resistant bacteriaவால் கொல்லப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கனேடிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
இந்நிலையில், கனடாவின் McMaster பல்கலை பேராசிரியரான Gerry Wright என்பவர், அவரது சக ஆய்வாளரான மன்பிரீத் கௌர் என்னும் இந்திய வம்சாவளி ஆய்வாளர் ஆகியோர் இணைந்து manikomycin என்னும் புதிய ஆன்டிபயாட்டிக் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அவர்களுடன் இந்த ஆய்வில் ஜேர்மனி மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
Streptomyces rimosus என்னும் பாக்டீரியத்தின் உடலிலுள்ள ஒரு உட்பொருளை பயன்படுத்தி இந்த ஆன்டிபயாட்டிக் தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான விடயம், இந்த manikomycin ஆன்டிபயாட்டிக், drug-resistant bacteriaவையும் கொல்லக்கூடியது என்பதுதான்.
இந்த ஆன்டிபயாட்டிக் தொடர்பில் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது என்பதால், அது பயன்பாட்டுக்கு வர சிறிது காலம் பிடிக்கக்கூடும்.
என்றாலும், அது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், drug-resistant bacteriaவால் கொல்லப்படும் நோயாளிகள் எண்ணிக்கை நிச்சயம் வெகுவாக குறையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இதற்கிடையில், இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான பேராசிரியர் Gerry Wright ஒரு உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளார்.
அது என்னவென்றால், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், ஆன்டிபயாட்டிக் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் அவர்.
அதாவது, சில நோய்களுக்கு மக்கள் நீண்ட காலமாக சிகிச்சை எடுக்கிறார்கள். சிகிச்சை எடுத்தும், அந்த நோய் முற்றிலும் குணமாவதில்லை.
ஆனால், அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு அந்த நோயால் கொள்ளை லாபம்.
அதே நேரத்தில், ஆன்டிபயாட்டிக்குகள் நோய்களை குணமாக்கிவிடுகின்றன. ஆகவே, நோயாளிகள் மீண்டும் மீண்டும் ஆன்டிபயாட்டிக்குகளை எடுக்க வேண்டியதில்லை.
ஆகவே, அவற்றை தயாரிப்பதால் நிறுவனங்களுக்கு லாபம் எதுவும் பெரிதாக இல்லை. ஆகவேதான் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், ஆன்டிபயாட்டிக் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் பேராசிரியர் Gerry Wright.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |